திருவனந்தபுரம்: கரோனா ஊரடங்கின் விளைவாக கேரளத்தில் 80,000 லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1637 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 38 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கின் விளைவாக கேரளத்தில் 80,000 லிட்டர் பால் சாக்கடையில் கொட்டப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கேரளத்தின் வடபகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சேகரிக்கப்படும் பாலானது அங்குள்ள கூட்டுறவு பால் சங்கங்களிடம் ஒப்படைக்கப்படும். அது பின்னர் அங்கிருந்து கேரள அரசாங்கத்தின் “மில்மா” பால் வாரியத்திடம் அளிக்கப்படும். உள்ளூர் தேவைக்கு அதிகமாக உள்ள பாலானது அருகாமை மாநிலமான தமிழகத்தில் உள்ள பால் பவுடர் தயாரிப்பு ஆலைகளுக்கு மில்மா மூலமாக அனுப்பி வைக்கப்படுவதுதான் வழக்கம்.
ஆனால் தற்போது கரோனா ஊரடங்கின் காரணமாக கேரளத்தில் டீக்கடைகள் எதுவும் இயங்குவதில்லை. கேரள வாகனங்களை தமிழகத்தின் உள்ளே அனுமதிப்பதும் இல்லை.
இதன்காரணமாக சேகரிக்கப்பட்ட சுமார் 80,000 லிட்டர் பாலை விவசாயிகள் அங்கிருந்த சாக்கடையில் கொட்டி அழித்தனர்.
அததேசமயம் அவர்களது பிரச்சினைக்கு மாற்று வழி காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, மாநில விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்துள்ளார்