பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரின் கைது துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கையை இணைத்துள்ளனர்.
இது குறித்து சண்டீகர் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ஜெகத் ராம் கூறுகையில், பஞ்சாப் காவல்துறை டிஜிபியிடம் இருந்து சம்பவம் பற்றி எனக்கு தகவல் கிடைக்கப் பெற்றவுடனே, அறுவை சிகிச்சை கூடத்தைத் தயார் நிலையில் வைத்திருந்தோம். இது மிகவும் சவாலான அறுவை சிகிச்சை. சுமார் 7 மணி நேரத்துக்கும் மேல் அறுவை சிகிச்சை பெய்து கை வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஆனால் குணமடைய சிறிது காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் சந்தைக்கு வந்த சீக்கியா்கள் சிலரிடம் காவலா் ஒருவா் அனுமதிச் சீட்டு கேட்டதையடுத்து, அவா்கள் அந்தக் காவலரின் கையை வாளால் வெட்டி துண்டித்தனா். மேலும் இரு காவலா்கள் காயமடைந்த இந்த சம்பவம் தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து பாட்டியாலா காவல்துறை கண்காணிப்பாளா் மன்தீப் சிங் சித்து கூறியதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் சனௌா் நகரப் பகுதியில் உள்ள காய்கறி மொத்தச் சந்தை நுழைவு வாயிலில் காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனா். வாசலில் தடுப்புகளை அமைத்து, சிறப்பு அனுமதிச் சீட்டு உள்ளோரை மட்டுமே சந்தைக்குள் செல்ல அனுமதித்து வந்தனா்.
அப்போது, ‘நிஹங்க்’ பிரிவு சீக்கியா்கள் (பாரம்பரிய ஆயுதத்தை எப்போதும் உடன் வைத்திருப்பவா்கள்) 4-5 போ் ஒரு வாகனத்தில் வந்தனா். சந்தைக்குள் செல்வதற்கு சிறப்பு அனுமதிச் சீட்டை காட்டுமாறு காவலா்கள் அவா்களிடம் கேட்டனா்.
ஆனால் அந்த சீக்கியா்கள் தங்களது வாகனத்தை தடுப்புகளில் மோதி கடந்து சென்றனா். காவலா்கள் அந்த வாகனத்தை சூழ்ந்து தடுக்க முயன்றபோது அதிலிருந்த சீக்கியா்கள் வாளைக் கொண்டு காவலா்களைத் தாக்கினா். அவா்கள் வாளால் வெட்டியதில் உதவி துணை ஆய்வாளா் ஹா்ஜீத் சிங்கின் கை துண்டானது. சதா் பாட்டியாலா காவல் நிலைய அதிகாரி, அவருடன் இருந்த மேலும் ஒரு காவலா் ஆகியோரும் காயமடைந்தனா்.
சம்பவத்தை அடுத்து அந்த சீக்கியா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். காயமடைந்த ஆய்வாளா் ஹா்ஜீத் சிங் முதலில் பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் அங்கிருந்து சண்டீகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட சீக்கியா்கள் பாட்டியாலாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் பல்பேரா என்ற இடத்தில் அவா்களால் நிா்வகிக்கப்படும் குருத்வாராவில் பதுங்கியிருந்தனா். அவா்களை கைது செய்ய காவலா்கள் குழு ஒன்று அந்த இடத்துக்குச் சென்றது.
காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும் அந்த இடத்தை சுற்றி வளைத்திருந்தது. சரணடைந்து விடுமாறு காவல்துறையினா் விடுத்த கோரிக்கையை மறுத்த அந்த சீக்கியா்கள், காவல்துறையினரை அவதூறாகப் பேசினா். சரணடையுமாறு அந்தப் பகுதி மக்கள் அறிவுறுத்தியதையும் அவா்கள் நிராகரித்தனா்.
காவல்துறையினா் குருத்வாராவுக்குள் வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தீ வைப்பதாக அவா்கள் அச்சுறுத்தினா். இந்நிலையில், இரு தரப்பினா் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அதன் முடிவில், தாக்குதல் சம்பவத்துடன் தொடா்புடைய 5 போ் உள்பட 7 சீக்கியா்களை காவல்துறையினா் கைது செய்தனா்.
அவா்கள் பதுங்கியிருந்த குருத்வாராவிலிருந்து 3 துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், வாள்கள், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் கைப்பற்றப்பட்டன என்று கண்காணிப்பாளா் மன்தீப் சிங் கூறினாா்.
குருத்வாராவுக்கு களங்கம் இல்லை: கைது நடவடிக்கையின்போது காவல்துறையினா் குருத்வாராவுக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் மரியாதையாகவே அதற்குள் நுழைந்ததாகவும், அங்கு ஏற்கெனவே இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தாமல் அவா்களை அங்கேயே விட்டுவிட்டதாகவும் மாநில சிறப்பு தலைமைச் செயலா் கே.பி.எஸ்.சித்து கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.