கரோனாவை பரப்பியதாக தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு
பிற மாவட்டங்களுக்கு கரோனாவைப் பரப்பியதாக உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது காவல்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆக்ரா: பிற மாவட்டங்களுக்கு கரோனாவைப் பரப்பியதாக உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது காவல்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 13,495 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 448 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இந்நிலையில் பிற மாவட்டங்களுக்கு கரோனாவைப் பரப்பியதாக உத்தரப்பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றின் மீது காவல்துறை வழக்குத் தொடர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா நகரில் பரஸ் என்னும் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. உள்ளூர் பெண் ஒருவர் இங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுராவில் உள்ள வேறோர்ர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கபட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பரஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் விபரங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கபட்டது.
ஆனால் தொடர்ந்த விசாரணையில் அம்மருத்துவமனையானது நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையினை குறைத்துக் காட்டியதும், பாதிக்கப்பட்ட நோயாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிய அனுமதித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து பிற மாவட்டங்களுக்கு நோய் பரவ காரணமாக இருந்ததாகக் கூறி, பரஸ் தனியார் மருத்துவமனை கரோனா பரவ அதிக வாய்ப்புள்ள இடமாக அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் 7-ஆம் தேதியன்று மூடப்பட்டது. அத்துடன் பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த மருத்துவமனை மீது வழக்கும் தொடரபட்டுள்ளது.