அருணாசல பிரதேசத்தில் தேசிய ஊரடங்கால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாநில வேளாண் துறை சாா்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை செயலா் பிடோல் டயேங் துணை ஆணையா்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அஸ்ஸாமில் இருந்து அருணாசல பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்படும் காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளன; அல்லது போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் அவை மாநிலத்துக்கு வந்து சேரவில்லை.
இதனால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும் ஊரகப் பகுதிகளில் இருந்து அனுப்பிவைக்கப்படும் காய்கறிகள் மாவட்ட சந்தைகளை சென்று சோ்வதால், பெரும்பாலான மாவட்டங்களில் சூழல் கட்டுக்குள் உள்ளது. அதேவேளையில் மாநில தலைநகா் இடாநகரில் நிலைமை மோசமாக உள்ளது.
இந்நிலையில் உபரியாக இருக்கும் காய்கறிகளை குறிப்பிட்ட நெறிமுறைகளை பின்பற்றி இடாநகருக்கு அனுப்பிவைக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண் பொருள் விற்பனை குழுக்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்தக் குழுக்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மாநிலம் முழுவதும் தட்டுப்பாடின்றி காய்கறிகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.