சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பல தொழில்கள் முடங்கின. அதில் ஒன்றுதான் திரையரங்குகள்.
திரையரங்குகள் தொடர்ந்து 4 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பதால், திரையரங்கு உரிமையாளர்களும், அதில் பணியாற்றி வந்த ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.
இதற்கிடையே, சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று வேகமாகப் பரவியதால் சந்தை மூடப்பட்டு, காய்கறி சந்தை திருமழிசைக்கு மாற்றப்பட்டது. இதனால் பூ வியாபாரிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர்.
இந்த நிலையில், கோயம்பேடு சந்தைப் பகுதிக்கு அருகே இயங்கி வந்த ரோஹிணி திரையரங்கின் உரிமையாளர், தனது திரையரங்கின் வாகன நிறுத்துமிடத்தை பூ வியாபாரிகளுக்குக் கொடுத்து உதவியுள்ளார்.
வாகன நிறுத்துமிடத்தில் பூச்சந்தையை அமைத்துக் கொண்டு வியாபாரிகள் பூ வியாபாரம் செய்து வருகிறார்கள்.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால், எங்களுக்கு போதுமான இடமில்லாமல் அவதிப்பட்டு வந்தோம். நல்ல வேளையாக திரையரங்கின் உரிமையாளர் இந்த வளாகத்தை தற்காலிகமாக பூச்சந்தை அமைத்துக் கொள்ள ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அதற்கு மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அரசு எங்களுக்கு விரைவில் ஓரிடத்தை ஒதுக்கும் என்று நம்புகிறோம் என்கிறார்கள் வியாபாரிகள்.