அரசு உதவிபெறும் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்து பயில ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோ விண்ணப்பித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பில் சேர்ந்து, சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கைவிட்ட பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர திட்டமிட்டுள்ளார் 53 வயதாகும் ஜார்க்கண்ட் அமைச்சர்.
தும்ரி பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் ஜகர்நாத், அரசியல் அறிவியல் படிப்பைத் தேர்வு செய்து படிக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
1995-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஜகர்நாத், அதன்பிறகு பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவரை ஜார்க்கண்ட் மாநில மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக நியமித்திருப்பது குறித்து பொதுமக்கள் முதல் பல்வேறு தரப்பினரும் விமரிசனங்களை முன் வைத்தனர். இதன் காரணமாக, தனது பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர முடிவு செய்துள்ளார் ஜகர்நாத்.
இது குறித்து அவர் கூறுகையில், தொடர்ந்து எனது படிப்பு குறித்து எழுப்பப்படும் விமரிசனங்களே, நான் மீண்டும் பள்ளிப் படிப்பைத் தொடரக் காரணமாக அமைந்துள்ளது. நான் விட்ட பள்ளிப் படிப்பைத் தொடங்கி முடிக்க உள்ளேன். குறிப்பாக என்னை கல்வித் துறை அமைச்சராக்கிய பிறகு, மக்கள் பலரும் எனது படிப்பு குறித்து பல்வேறு சர்ச்சையை எழுப்பி வருகிறார்கள். எனவே தான் நான் படிப்பை மீண்டும் தொடருவது என்று முடிவு செய்தேன் என்கிறார்.
அமைச்சர் பதவியையும், பள்ளிப் படிப்பையும் எவ்வாறு சமன் செய்வீர்கள் என்று கேட்டதற்கு, முதலில் எனக்கு பள்ளியில் சேர்க்கை கிடைக்கட்டும், இப்போதுதான் விண்ணப்பித்துள்ளேன். எனது விண்ணப்பங்கள், பள்ளி சேர்க்கை விதிமுறைகளுக்கு உள்பட்டு இருந்தால் எனக்கு சேர்க்கை கிடைக்கும். அதன்பிறகுதான் அமைச்சர் பதவியையும் பள்ளிப் படிப்பையும் நான் சமன் செய்வது குறித்து சிந்திக்க வேண்டும் எனறு குறிப்பிட்டுள்ளார்.