இந்தியாவில் ஒரு நாளில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா, பிரேசிலை விட அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு உள்ளது. அதிகரித்து வரும் கரோனா பாதிப்பிலிருந்து மீள பல்வேறு நாடுகளும் போராடி வருகின்றன. உலக அளவில் கரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்காவும் அதனைத் தொடர்ந்து பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.
அமெரிக்காவும் பிரேசிலும் அதிக கரோனா பாதிப்புகளை பதிவு செய்திருந்தாலும் இந்தியா, தினந்தோறும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
”ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்தியாவில் புதிதாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 379 ஆக உள்ளது. இதேவேளையில் அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 69 ஆயிரத்து 575 ஆகவும், பிரேசிலில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 535 ஆகவும் உள்ளது.” என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் பிரேசிலைக் காட்டிலும் இந்தியாவில் குறைவாக உள்ளது. ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து கரோனா பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 9 ஆயிரத்து 510 ஆகவும், அமெரிக்காவில் 10 ஆயிரத்து 731 ஆகவும், பிரேசிலில் 10 ஆயிரத்து 551 ஆகவும் உள்ளது.