2019-20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை: ரிசர்வ் வங்கி
2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: 2019 - 20-ஆம் ஆண்டில் 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்றும், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தும் குறைந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 33,632 தாள்களாக இருந்த நிலையில், இது 2019 மார்ச் இறுதியில் 32,910 ஆகவும், 2020 மார்ச் இறுதியில் 27,398 தாள்களாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
மேலும், 2020 மார்ச் இறுதியில், நாட்டில் ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் விகிதம் 2.4 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2018 மார்ச் இறுதியில் 3.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, 2018-ஆம் ஆண்டு முதல் இரண்டு தாள்களின் புழக்கமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை புதிதாக அச்சிடுவது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும், 2019 - 20-ஆம் ஆண்டில் 2000 ரூபாய் புதிய நோட்டுகள் விநியோகிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 - 20ஆம் ஆண்டில் ரூ.100 (330 கோடி தாள்கள்), ரூ.50 (240 கோடி தாள்கள்), ரூ.200 (205 கோடி தாள்கள்), ரூ.10 (147 கோடி தாள்கள்), ரூ.20 (125 கோடி தாள்கள் அச்சிட ஆணை வழங்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் நோட்டுகளை வார்னிஷ் ரூபாய் நோட்டுகளாக அச்சிடும் சோதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணி தாமதமாவதாகவும் கூறப்பட்டுள்ளது.