உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம்
பட்டியலினப் பிரிவில் உள்ள அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புது தில்லி: பட்டியலினப் பிரிவில் உள்ள அருந்ததியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அருந்ததியினருக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உள் இட ஒதுக்கீடு என்பது மாநிலங்களின் அதிகாரம் சார்ந்த விஷயம். இட ஒதுக்கீடு வழங்க ஒரு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்குமானால், உள் இட ஒதுக்கீடு வழங்கவும் அதிகாரம் உள்ளது. மாநில அரசுக்கு இருக்கக் கூடிய அதிகாரங்களை யாரும் பறிக்கக் கூடாது. நடைமுறையில் இருக்கும் உள் இட ஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்க வேண்டியுள்ளது.
எனவே, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவீதத்தில் அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது.
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.