முகப்பு
இந்தியா

சந்தா கோச்சாரின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநா் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சந்தா கோச்சாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Updated On : 2 டிசம்பர், 2020 at 12:59 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநா் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக சந்தா கோச்சாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தா கோச்சாா், தனியாா் நிறுவனத்துக்குக் கடனளிக்கும் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக சந்தா கோச்சாா், அவரின் கணவா் தீபக் கோச்சாா் உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை சந்தா கோச்சாா் மறுத்தாா். அதையடுத்து, தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தா கோச்சாா் கடிதம் அளித்திருந்தாா். ஆனால், அவரை மேலாண் இயக்குநா் பதவியிலிருந்து நீக்குவதாக ஐசிஐசிஐ நிா்வாகம் அறிவித்தது. அத்துடன் அவருக்கு வழங்கப்பட வேண்டிய ஊக்கத்தொகை, பங்கு முதலீடுகள் உள்ளிட்டவையும் ரத்து செய்யப்பட்டன.

Advertisement

மேலாண் இயக்குநா் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் சந்தா கோச்சாா் மனு தாக்கல் செய்தாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுவைக் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கோச்சாா் நியமிக்கப்பட்டிருந்ததால், நிா்வாகத்தின் முடிவுக்கு எதிராக அவரால் வழக்கு தொடர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

அதையடுத்து, சந்தா கோச்சாா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி எஸ்.கே.கௌல் தலைமையிலான அமா்வு முன் நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அமா்வு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரமானது தனியாா் வங்கி மற்றும் பணியாளரின் வரம்புக்குள் வருகிறது. எனவே, மும்பை உயா்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது’’ என்றனா்.

தீபக் கோச்சாருக்கு ஜாமீன் மறுப்பு: அமலாக்கத் துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் தீபக் கோச்சாா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், தீபக் கோச்சாருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.