சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம்: நேரில் சென்றார் கேஜரிவால்
தில்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆய்வு
புது தில்லி: தில்லியின் எல்லைப் பகுதியான சிங்குவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை வசதிகள் குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நேரில் ஆய்வு செய்தார்.
டிசம்பர் 8-ம் தேதி விவசாயிகள் அறிவித்திருக்கும் நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி தனது ஆதரவை நேற்று தெரிவித்திருந்த நிலையில், விவசாயிகளுக்கு தில்லி அரசு செய்து கொடுத்திருக்கும் அடிப்படை வசதிகளை முதல்வர் கேஜரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
தில்லி - ஹரியாணா எல்லைப் பகுதியான சிங்கு எல்லைக்கு முதல்வர் கேஜரிவால் சென்ற போது அவருடன் சில அமைச்சர்களும், கட்சியின் எம்எல்ஏக்களும் உடன் சென்றிருந்தனர்.
இந்த ஆய்வு குறித்து பேசிய கேஜரிவால், அங்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யச் சென்றேன். தில்லியில் உள்ள மைதானங்களை, விவசாயிகளை அடைத்து வைக்கப் பயன்படுத்தும் சிறைகளாக மாற்ற அனுமதி தரும்படி எங்களுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், விவசாயிகளுக்கு எந்த கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதில் எங்கள் கட்சி எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் உறுதியாக உள்ளனர். இங்கு நான் ஒரு முதல்வராக வரவில்லை. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு சேவகராகவே வந்துள்ளேன். விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து உதவி செய்ய வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆம் ஆத்மி கட்சியினரையும், பொதுமக்களையும் நேற்று கேட்டுக் கொண்டிருந்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தில்லியின் பல்வேறு எல்லைகளிலும் பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப்பிரதே மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.