வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: புதன்கிழமை கூடுகிறது கேரள பேரவைக் கூட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு புதன்கிழமை கூடுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தின் சிறப்பு அமர்வு புதன்கிழமை கூடுகிறது.
முதல்வர் பினராயி விஜயன் இதற்கு அனுமதி கோரியிருந்த நிலையில், ஆளுநர் ஆரிஃப் முகமது கான் திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் 26-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கேரள அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சிறப்பு அமர்வைக் கூட்டி சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப்பேரவையில் ஓ. ராஜகோபால் மட்டுமே பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். இதனால், தீர்மானம் நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது.
இந்த சிறப்பு அமர்வு ஒரு மணி நேரம் மட்டுமே கூடுகிறது. கட்சிகளின் பிரதிநிதிகளாக கட்சித் தலைவர்கள் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள். அதன் முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளம். அதன்பிறகே, மற்ற மாநிலங்கள் வழக்கு தொடர்ந்தன.