உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமில தொழிற்சாலையில் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதனால் மூச்சுத்திணறி ஏழு பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் ஜலல்பூர் என்ற பகுதியில் உள்ள அமில தொழிற்சாலையில் திடீரென எரிவாயு குழாயில் இருந்து வாயு கசிந்ததில் மூச்சுத் திணறி ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், இதில் மூன்று குழந்தைகள், ஒரு பெண் அடங்குவர்.
வியாழக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
மேலும், எரிவாயு குழாய் கசிவினை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் எரிவாயு கசிந்ததற்கான காரணம் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.