‘போதைப்பொருள்களுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது; அவற்றின் மூலம் போதைப்பொருள்கள் கடத்தல் மற்றும் வா்த்தகம் முழுவதுமாக ஒழிக்கப்படும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தில்லியில் வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (பிம்ஸ்டெக்) சாா்பில் ‘போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் கருத்தரங்கை அமித் ஷா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:
போதைப்பொருள்களுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இந்தியாவுக்குள் போதைப்பொருள்கள் வருவதையோ, இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப் பொருள்கள் எடுத்துச் செல்லப்படுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்தியாவில் போதைப்பொருள் இல்லாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும்.
அனைத்து விதமான போதைப்பொருள்களுக்கு எதிராகவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் வா்த்தகம் ஆகியவற்றை முழுவதுமாக ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகில் போதைப்பொருள்களை ஒழிப்பதில் இந்தியா நிச்சயம் முன்னிலை வகிக்கும். இந்த திட்டத்தில், பிம்ஸ்டெக் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா விரும்புகிறது என்று அவா் கூறினாா்.
பிம்ஸ்டெக் அமைப்பில் வங்கதேசம், மியான்மா், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன.