முகப்பு
இந்தியா

என்ன.. கரோனா வைரஸ் பாதிப்பினால் டிவி விலை உயருமா?

கரோனா வைரஸ் பாதிப்பினால் ஒட்டுமொத்த சீனாவும் முடங்கிப் போயிருக்கும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் டிவி விலை உயரும் என்று கூறப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:56 PM
பகிர்:


புது தில்லி: கரோனா வைரஸ் பாதிப்பினால் ஒட்டுமொத்த சீனாவும் முடங்கிப் போயிருக்கும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் டிவி விலை உயரும் என்று கூறப்படுகிறது.

சீனாவில் கரோனா பாதித்து தொழில்துறையும் முடங்கியிருக்கும் காரணத்தால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஓபன் - செல் தொலைக்காட்சிப் பேனல் இந்தியா வந்தடைவது தடைபட்டுள்ளது.

ஒரு தொலைக்காட்சியின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்காற்றும் டிவி பேனல்கள் சீனாவில் இருந்தே இறக்குமதி பெய்யப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்படும் இறக்குமதி பாதிப்பை ஈடு செய்யும் வகையில், பல முன்னணி நிறுவனங்கள், தேவையை விட அதிக அளவில் தொலைக்காட்சிப் பேனல்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும், ஒட்டுமொத்தமாக இறக்குமதி குறைந்ததால், டிவி உற்பத்திக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது சில தொழிற்சாலைகள் திறக்கப்பட்டாலும் கூட, குறைந்த தொழிலாளர்களுடனே இயங்கி வருகிறது.

இதனால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பேனல்களின் விலை 20% அளவுக்கு உயரும் ஆபாயம் உள்ளது. பழைய அளவுக்கு இறக்குமதி சீராக, நிச்சயம் ஒரு காலாண்டு ஆகும் என்றும் நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக, வரும் மார்ச் மாதத்தில் இந்தியாவில் டிவி விலை நிச்சயம் 10 சதவீதம் அளவுக்கு உயரும் என்று கூறப்படுகிறது.

அதே சமயம், இந்தியாவில் உற்பத்தியில் 30 - 50% தொய்வு நிலை ஏற்படும் என்றும் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டிவி மட்டுமல்ல, இதுபோன்ற காரணங்களால் குளிர்பதனப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.