முகப்பு
இந்தியா

காந்தி பெயரைக் குறிப்பிடாத ட்ரம்ப்: கனல் கக்கும் காங்கிரஸ் தலைவர்கள்

சபர்மதி ஆசிரம விருந்தினர் குறிப்பேட்டில் மகாத்மா காந்தியின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:58 PM
ட்ரம்பின் பதிவு
பகிர்:

புது தில்லி: சபர்மதி ஆசிரம விருந்தினர் குறிப்பேட்டில் மகாத்மா காந்தியின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு  வருகை தந்தார். இந்தியா வரும் பல்வேறு உலகத் தலைவர்களும் இந்த ஆசிரமத்துக்குச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தந்த டொனால்ட் டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தியடிகளின் புகைப்படத்துக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். பின்னர், ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி தொடர்பான சிறப்பான பல்வேறு பொருட்கள் மற்றும் விஷயங்கள் குறித்து டொனால்ட் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த நூல் நூற்கும் இராட்டையைப் பார்த்த டிரம்ப் தம்பதி அதனருகே அமர்ந்து, நூல் நூற்க முயன்றனர். அப்போது மெலனியா இராட்டையைச் சுழற்ற, அதற்கு ஏற்றவாறு  பஞ்சுத் திரி நூலாக மாறுவதை டிரம்ப் வியப்போடு பார்த்தார். இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். டிரம்ப் மற்றும் மெலனியா இருவரும் இராட்டை செயல்படும் விதம் குறித்து மிகுந்த ஆர்வத்தோடு கேட்டறிந்தனர்.

டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா, பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை சுற்றிப் பார்த்தனர். அப்போது, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று குரங்குகள் பொம்மையைக் காட்டி பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப் தம்பதிக்கு விளக்கினார். பிறகு, ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருக்கும் வருகைப் பதிவேட்டில், ஆசிரமம் பற்றிய தங்களது கருத்துகளை பதிவிட்டு, தம்பதியர் கையெழுத்திட்டனர்.

அந்த பதிவேட்டில், எனது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்த சிறப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறி கையெழுத்திட்டுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

பின்னர் சபர்மதி ஆசிரம பயணத்தை முடித்துக் கொண்டு டொனால்ட் டிரம்ப் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்நிலையில் சபர்மதி ஆசிரம விருந்தினர் குறிப்பேட்டில் மகாத்மா காந்தியின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடததற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மனிஷ் திவாரி தனது ட்விட்டர் பக்கத்தில், ட்ரம்பின் பதிவு  உள்ள விருந்தினர் பதிவேட்டின் பக்கத்தை வெளியிட்டு, 'இதை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். சபர்மதி ஆசிரமத்தில் ட்ரம்பின் பதிவு இது. இதில் காந்தியைப் பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி யார் என்றாவது அவருக்குத் தெரியுமா?' என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்ததாக, 2010-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியா வந்திருந்த சமயத்தில், காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டிலோ அல்லது சபர்மதி ஆஸ்ரமத்திலோ பதிவு செய்திருந்த தகவலையும் அவர் பகிர்ந்திருந்தார். அதில் ஒபாமா, 'இந்தியாவிற்கு மட்டும் அல்ல… காந்தி உலகத்திற்கே ஒரு நாயகர் என்று பதிவு செய்திருந்தார். அதைச் சுட்டிக் காட்டிய மணிஷ் திவாரி, ' இருவருக்குமான  வேறுபாடு முற்றிலும் வெளிப்டையாகத் திரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.     

அதேசமயம் முன்னாள் அமைச்சரான சசி தரூரும் அதிபர் ட்ரம்பின் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.