புது தில்லி: கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து பின்வாங்கி வருகிறது.
சீன ராணுவப் படைகள் கண்காணிப்பு மையம் 14-ல் இருந்து கூடாரங்களையும், கட்டமைப்புகளையும் அகற்றி வருவதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 30-ம் தேதி இரு நாடுகளின் தரப்பில் ராணுவத் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி சீன ராணுவப் படைகள் எல்லையில் இருந்து பின் வாங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் சீன ராணுவப் படைகள் பின் வாங்கி வருவதாகவும், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீன ராணுவப் படைகள் பின் வாங்கி வருவது வாகனங்களின் போக்குவரத்து மூலம் தெரிய வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதே சமயம், ஃபிங்கர் 4 மற்றும் ஒய்-ஜங்ஷன பகுதிகளில் இருந்து சீனப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இந்திய - சீனப் படைகள் கிழக்கு லடாக்கின், தெற்கு முதல் வடக்கு, ஃபிங்கர் 4, பங்கோங் ட்ஸோவின் வடக்கு ஃபிளாங்க், கோக்ரா முகாம், கண்காணிப்புக் கோபுரம் 14 மற்றும் 5, கல்வான் பள்ளத்தாக்கு, ஒய்-ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் சீனப் படைகள் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.