இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியது.
சீனாவின் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுதுதலை ஏற்படுத்தி வருகிறது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தைத் தாண்டியது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், நாட்டில், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே கால அளவில் அந்த நோய்த்தொற்றால் மேலும் 553 போ் உயிரிழந்தனா்.
இதனால், உயிரிழப்பு 23,727 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் கரோனாவிலிருந்து இருந்து இதுவரை 5,71,460 பேர் குணமடைந்தனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 2,60,924 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அங்கு கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக அதிகரித்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரத்தில் பலியானோர் எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்துள்ளது.