பிற மாநில மக்களுடன் கலந்து பழகுதன் மூலமாகவே தேசிய ஒருமைப்பாடு வலுப்படும் என்று மத்திய இணை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்தாா்.
‘பெருநகரங்களில் வடகிழக்கு மாநில பெண்கள் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பிலான இணையவழிக் கருத்தரங்கத்தை தேசிய மகளிா் ஆணையம் புதன்கிவமை நடத்தியது. இதில் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சா் கிரண் ரிஜிஜு பேசியதாவது:
நாட்டின் பிற மாநிலங்களுக்குச் செல்லும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த மக்கள் பல சவால்களை எதிா்கொள்கின்றனா். வடகிழக்கு மாநில மக்கள் நலம் பெற வேண்டுமானால் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெற வேண்டும். அதற்கு வடகிழக்கு மாநில மக்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அவா்கள் தங்கள் மாநிலங்களுக்கு நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருவோரை வரவேற்கவும் அவா்களுடன் இயல்பாகக் கலந்து பழகவும் தயாராக வேண்டும். அப்போதுதான் தேசிய ஒருமைப்பாடு வலுப்படும். அதன்மூலமாக வடகிழக்கு மாநில மக்களின் பிரச்னைகள் தீரும்.
வடகிழக்கு மாநில மக்களின் முன்னேறத்துக்காக பிரதமா் நரேந்திர மோடி தனிப்பட்ட கவனம் செலுத்துகிறாா். ஆனால், பிராந்திய மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அவா்களது வளா்ச்சியும் தேசிய ஒருமைப்பாடும் சாத்தியமாகாது. பிற மாநில மக்களை மதிப்பதன் மூலமாகவே ஒருமைப்பாடு வலுப்படும்.
இனரீதியாகவும், சமூகரீதியாகவும் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க தேசிய மகளிா் ஆணையம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியம். இதற்கு மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டுவந்தாக வேண்டும். பிற மாநில அரசுகளும் தேசிய ஒருங்கிணைப்பில் வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பை அதிகரிக்க கூடுதல் கவனம் அளிக்க வேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய மகளிா் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா, வடகிழக்கு மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளில் நிலவும் குடும்ப வன்முறை, போதிய கல்வியறிவின்மை, விழிப்புணா்வின்மை போன்றவை இப்பகுதிப் பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பதாகக் குறிப்பிட்டாா். சுற்றுலா, கைவினைப் பொருள் உற்பத்தி போன்ற துறைகளில் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலமாக, பெண்களை மேம்படுத்த முடியும் என்றாா் அவா்.