அலிகார்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும், தனது நோயாளிகளுக்கு விடியோ வழியாக சிகிச்சையளிக்கும் மருத்துவரின் செயல் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் ஜவஹர்லால் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அலிகார் இஸ்லாமிய பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்தக் கல்லூரியின் காசநோய் மற்றும் நெஞ்சக நோய்கள் சிகிச்சைப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் முகம்மது சமீம். இவர் மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் மற்றும் இதர நெஞ்சக நோய் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இருந்தபோதிலும் விடியோ கான்பெரன்சிங் வழியாக தனது மருத்துவமனை சக ஊழியர்களுடன் தொடர்பு கொண்டு, அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகள் மற்றும் இதர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதைத் தொடர்ந்து வருகிறார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், ‘எனது நோயாளிகளுக்கு சிகிச்சை தடையின்றித் தொடர வேண்டுமென்று விரும்புகிறேன். என்னைப் போல கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற மருத்துவர்களும் இதுபோல முறைகளை மேற்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வது சரியாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.