மத்திய அரசின் எந்த ஒரு உதவிக்கும் காத்திருக்காமல் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்களை, அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக மகாராஷ்டிர அரசு ரூ. 100 கோடி செலவிட்டதாக மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் சனிக்கிழமை தெரிவித்தாா்.
கரோனா நோய்த்தொற்று தடுப்பு தொடா்பான அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பயணச்சீட்டின் 85 சதவீத கட்டணத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், மாநில அரசு, மத்திய அரசின் நிதி உதவிக்காக காத்திருக்கவில்லை. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ. 100 கோடியை செலவிட்டது. அவா்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கியதுடன், ரயில் கட்டணத்தையும் மாநில அரசே தொழிலாளா்களுக்காக செலுத்தியது என்றாா் அவா்.