புது தில்லி: கரோனாவுக்கு எதிரான போரில் புது தில்லி பல்வேறு வகையில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது, இந்த போரில் நிச்சயம் தில்லி வெற்றி பெறும்; ஆனால் அதற்கு சற்று காலம் ஆகும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை ஏற்படுத்துவது, கரோனா பரிசோதனையை அதிகரிப்பது, கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிமீட்டர் வழங்குவது, வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளின் ஆக்ஸிஜன் அளவை கண்காணிப்பது, நிலைமை கவலைக்கிடமாகும் நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரப்பி அளிப்பது, தொடர்ந்து கண்காணிப்புப் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு மேற்கொண்டு வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 13,500 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 7,500 வசதிகள் காலியாக உள்ளன.
தினமும் தில்லியில் 20 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.