புது தில்லி: நாட்டையே உலுக்கிய தில்லி வன்முறை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புது தில்லியின் வடகிழக்கு பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 47 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏகப்பட்ட பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. இதுதொடர்பாக சிறப்பு விசாரணை குழுக்களை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டையே உலுக்கிய தில்லி வன்முறை குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூகச் செயற்பாட்டாளர் யோகிதா பயனா என்பவர் சார்பாக வழக்கறிஞர் உத்சவ் சிங் பைன்ஸ் என்பவர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் தில்லி வமுறை தொடர்பாக தகுந்த அதிகாரிகளைக் கொண்டு நீதிமன்ற கண்காணிப்பில் செயல்படும் சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அத்துடன் கலவரத்தைத் தடுப்பதற்கு சரியான முறையில்நடவடிக்கை எடுக்காத காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை வேண்டும் என்றும், கலவரப் பகுதிகளில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் அலைபேசி அழைப்பு விபரங்கள் மற்றும் அப்போதைய அலைபேசி கோபுர இருப்பிட விபரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும், கலவரத்தின்போது அந்தப் பகுதியில் உள்ள காவல்நிலையங்களின் சிசிடிவி கேமரா காட்சிகள் உடனடியாக சேகரிக்கப்பட வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் பொதுநல மனுவில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.