மேற்கு வங்கத்தில் திருத்தம் செய்யக்கோரி விண்ணப்பிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ராம்நகர் கிராமத்தில் வசிப்பவர் சுனில் கர்மாக்கர். இவர் அண்மையில் தனது வாக்காளர் அட்டையில் திருத்தங்கள் செய்யக்கோரி விண்ணப்பம் செய்து இருந்தார். இதையடுத்து திருத்தங்கள் செய்யப்பட்ட வாக்காளர் அட்டையை அவர் நேற்று பெற்றிருக்கிறார்.
ஆனால் வாக்காளர் அடையாள அட்டையை பார்த்த சுனில் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், வாக்காளர் அட்டையில் அவரது புகைப்படத்துக்கு பதிலாக நாய் ஒன்றின் படம் இடம்பெற்றிருந்தது. உடனே, இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு சுனில் புகார் அளித்தார்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது இத்தகைய தவறு நடந்திருக்கலாம் என்றும் சரியான புகைப்படத்துடன் இறுதி வாக்காளர் அட்டை சுனிலுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அதிகாரி ராஜர்ஷி சக்ரபோர்ட்டி தெரிவித்துள்ளார்.