ராய்பூர்: நெஞ்சு வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தற்போது கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி. 2000-ஆம் ஆண்டு மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரித்து அம்மாநிலம் உருவாக்கப்பட்ட போது, காங்கிரஸ் சார்பில் அதன் முதலாவது முதல்வராக பொறுப்பேற்றவர். பின்னர் 2003-இல் நடந்த தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். காங்கிரசில் இருந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக விலகியவர் 2016-இல் ‘ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர்’ என்னும் கட்சியைத் தொடங்கி அதன் தலைவரானார். தற்போது அவர் மார்வாஹி தொகுதி சட்டபேரவை உறுப்பினராக உள்ளார்.
திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக இவர் சனிக்கிழமையன்று ராய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஞாயிறன்று அவர் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘அவரது மூளைக்கு ஆக்சிஜன் செல்வது சிறிது நேரம் தடைப்பட்டதன் காரணமாக ‘ஹைபோக்சியா’ என்னும் மூளைச் சேதம் நிகழ்ந்துள்ளது. அவரது நரம்பு மண்டலம் செயல்படவில்லை. இதுயதுடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை மருந்தின் மூலமாக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.