முகப்பு
இந்தியா

முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும்தான் உபா சட்டமா? ஒவைசி

முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டும்தான் உபா சட்டமா என ஹைதராபாத் எம்பியும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 12 மே 2020, 4:43 pm IST
பகிர்:


முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் மட்டும்தான் உபா சட்டமா என ஹைதராபாத் எம்பியும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

அசாதுதீன் ஒவைசி இணையதளம் வாயிலான பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது தில்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது மற்றும் ஊரடங்கு அமல் பற்றி அவர் பேசுகையில்,

"தில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 4 மாத கர்ப்பிணி. குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காக மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள் அல்லது யாரெல்லாம் அரசுக்கு எதிரோ அவர்களுக்கு மட்டும்தான் உபா சட்டமா? என்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வி எழுப்புகிறேன். அதேசமயம், துரோகிகளை சுடுங்கள் என்று முழக்கம் எழுப்பியவர்கள் மீது குறைந்தபட்சம் கைது நடவடிக்கைகூட இல்லை.

ஊரடங்கை அமல்படுத்துவது அரசியலமைப்புக்கு எதிரானது. தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்படி, நாடு முழுவதும் மத்திய அரசால் ஊரடங்கை அமல்படுத்த முடியாது. இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. அது மாநில உரிமைக்குள்பட்டது. மாநில அரசு அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த ஊரடங்கு காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஔரங்காபாத் விபத்தில் 16 பேர் பலியாகியுள்ளனர்." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.