சிறு, குறு தொழில்துறைக்கு 6 முக்கிய அறிவிப்புகள்: பிணையில்லா கடனுதவி
இந்திய நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்துறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 6 சலுகைகளை அறிவித்துள்ளார்.
புது தில்லி: இந்திய நாட்டில் உள்ள சிறு, குறு தொழில்துறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 6 சலுகைகளை அறிவித்துள்ளார்.
புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,
சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் சிறு, குறு நிறுவனங்கள் அக்டோபர் 31ம் தேதி வரை கடன் உதவி பெறலாம்.
இந்த 3 லட்சம் கோடி கடனுதவி திட்டத்தின் மூலம் சுமார் 45 லட்சம் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் பலனடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி அளவுக்கு வியாபாரம் செய்யும் சிறு,குறு நிறுவனங்களுக்கு, ரூ.25 கோடி அளவுக்கு மட்டுமே கடன் நிலுவையில் இருக்கும்பட்சத்தில் கூடுதலாக இந்த கடன் உதவியைப் பெறலாம்.
புதிய கடன் வசதியைப் பெற சொத்துப் பத்திரங்கள் போன்ற எந்த பிணையும் தரப்பட வேண்டாம்.
மேலும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான வரையறை மாற்றியமைக்கப்படுகிறது. முதலீட்டு உச்ச வரம்பு மாற்றியமைக்கப்படுவதால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பலனடையும்.
நிதி உதவி தேவைப்படும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி துணைக் கடன் வழங்கப்படும்.
பொதுமுடக்க காலத்தில் நலிவடைந்த சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு கடன் வழங்குவதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும்.
நிதிக்குள் நிதி என்ற அடிப்படையல் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் கோடி மூலதன நிதி வழங்கப்படும்.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனை திருப்பிச் செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். மேலும், புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கடனுதவியை 4 ஆண்டுகளுக்கு தவணையாக திரும்ப செலுத்தலாம். முதல் ஆண்டில் தவணை வசூலிக்கப்படாது என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.