லக்னௌ: உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அந்த நாட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வேண்டுகோளின் பேரில் சிறப்பு ரயில்களில் வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் முடிவு செய்துள்ளார். இதற்காக ரயில்வேக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்படும் என்று உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்தார்.
மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் அவர்களின் திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே வீட்டு தனிமைப்படுத்துதலுக்கு உணவுப் பொட்டலங்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், இவர்கள் வெளியில் சுற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை வரை 318 ரயில்களில் பிற மாநிலங்களிலிருந்து 3.84 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி.க்கு அழைத்து வந்துள்ளனர். அதே நேரத்தில் மாணவர்கள் உள்பட 72,637 பேர் பேருந்துகள் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
மேலும், புலம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் நடைப் பயணமாகவும், சைக்கிள் மூலமாகவும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கவேண்டும் என்று முதல்வர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.