நிதியமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தார். இதன்படி சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா இன்று மாலை வெளியிட்டார்.
அதில், 2020-21 ஆம் ஆண்டில் பால் உற்பத்திப் பொருள்களுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும். மேலும், உடனடியாக பணம் செலுத்துதல் மற்றும் வட்டி சேவைக்கு மேலும் 2% வட்டி மானியம் வழங்கப்படும். இது சுமார் 2 கோடி விவசாயிகளுக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த திட்டங்களை வரவேற்கிறேன்.
இது கிராமப்புற பொருளாதாரம், நமது கடின உழைப்பாளி விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் துறைகளுக்கு உதவும். குறிப்பாக வேளாண்மைத்துறைக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை நான் வரவேற்கிறேன். விவசாயிகளின் வருமானத்தை இது அதிகரிக்கச் செய்யும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.