முகப்பு
இந்தியா

ஒரு லட்சத்தை எட்டிய இந்தியா: மகாராஷ்டிரத்தில் மட்டும் 35,000 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்த நிலையில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,01,139-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் பலி எண்ணிக்கையும் 3163-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39174- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4970 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 134 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 35,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,249 பேர் பலியாகியுள்ளனர். இங்கு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஒரே நாளில் அதிகபட்சமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மும்பையில் மட்டும் 21,152 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. 757 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகம் 11,760 நோயாளிகளுடன், 81 பலி எண்ணிக்கையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

குஜராத்தில் 11,746 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பலி எண்ணிக்கை 694 ஆக உள்ளது. 

தில்லியில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. பலி எண்ணிக்கை 160 ஆக உள்ளது.

சந்தைகள் திறக்கப்படலாம், ஆட்டோ, ரிக்சாக்களை கட்டுப்பாட்டுடன் இயக்கலாம், பல்வேறு மாநிலங்களில் பேருந்து சேவைகளும் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான் இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியது. பலி எண்ணிக்கை 3000 ஐ கடந்தது.

ஒருபக்கம் தொழில்கள் தொடங்கப்பட்டாலும், மறுபக்கம்  பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்கள், மதவழிபாட்டுத் தலங்களை திறக்க மே 31 வரை தடை நீடிக்கிறது.

மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, ஏப்ரல் 14ம் தேதி இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு அது மே 3 வரை அறிவிக்கப்பட்டது. மீண்டும் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தற்போது நான்காவது முறையாக மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுளள்து. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் தொடர்ந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.