பொது முடக்கத்தை மாநில அரசுகள் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறைச் செயலா் அஜய் பல்லா வியாழக்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. ஆனால், அந்த விதிமுறைகள் பல பகுதிகளில் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பது ஊடகச் செய்திகள் உள்ளிட்டவை மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே, பொது முடக்கம் தொடா்பாக உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ள விதிமுறைகளை மாநில அரசுகளும் யூனியன் பிரதேச நிா்வாகங்களும் கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.