ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கரோனா பொது முடக்கத்தைக் கருத்தில்கொண்டு 2020-21ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்கலையில் உள்ள 132 படிப்புகளில் சேருவதற்கு மொத்தம் 2,456 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், உலகளவில் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதைக் கருத்தில் கொண்டு வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என்று ஹைதராபாத் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2020-21 கல்வியாண்டிற்கான நுழைவுத்தேர்வு மற்றும் பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு ஏப்ரல் 3 முதல் மே 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டது.
மாணவர்கள் மேலும் புதிய தகவல்களுக்கு பல்லைக்கழக வலைத்தளத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தம் 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 1,043 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.