கரோனா பாதித்தோரில் 2 ஆயிரம் பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர்: கேஜரிவால்
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரில் 2,100 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரில் 2,100 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இதுபற்றி இன்று (சனிக்கிழமை) பேசினார்
அவர் பேசியதாவது:
"தில்லியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை நன்கு அதிகரித்து வருகிறது. நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இது கவலைக்குரிய விஷயம் என்றாலும், யாரும் அச்சப்படத் தேவையில்லை. கரோனா வைரஸைக் காட்டிலும், தில்லி அரசு 4 மடங்கு முன்நோக்கி உள்ளது என்பதை உறுதிபடத் தெரிவிக்கிறேன். மொத்தம் பாதித்தோரில் வெறும் 2,100 பேர் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனர். மற்றவர்கள் அவரவர் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.
இன்றைய தேதியில் 6,600 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஜூன் 5-இல் 9,500 படுக்கை வசதிகள் இருக்கும்.
தில்லியில் மொத்தம் 17,386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9,142 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,846 பேர் குணமடைந்துள்ளனர், 398 பேர் பலியாகியுள்ளனர்."