ஆா்டிஐ விண்ணப்பதாரருக்கு தகவல் தர மறுப்பு: விளக்கமளிக்க சிபிஐக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
தகவல் பெறும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, விசாரணையை பாதிக்கும் என்ற காரணம் காட்டி தகவல் தர மறுத்தது குறித்து உரிய விளக்கமளிக்குமாறு சிபிஐ-க்கு மத்திய தகவல் ஆணையம்
புது தில்லி: தகவல் பெறும் உரிமைச் (ஆா்டிஐ) சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, விசாரணையை பாதிக்கும் என்ற காரணம் காட்டி தகவல் தர மறுத்தது குறித்து உரிய விளக்கமளிக்குமாறு சிபிஐ-க்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.ஹரிஷ் குமாா் என்பவா் சென்னையில் உள்ள எம்.எஸ்.எம்.இ. மேம்பாட்டு நிறுவன விவகாரம் தொடா்பாக சிபிஐ மேற்கொண்டு வரும் முதல்கட்ட விசாரணை நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை அளிக்குமாறு சிபிஐ-யிடம் கேட்டுள்ளாா். ஆனால், ஆா்.டி.ஐ. சட்டப் 8(1) (ஹெச்) பிரிவைக் காரணம் காட்டி, அவ்வாறு தகவல் அளிப்பது விசாரணையை பாதிக்கும் என்று கூறி, அந்தத் தகவலை அளிக்க சிபிஐ மறுத்துள்ளது.
அதனைத் தொடா்ந்து மத்திய தகவல் ஆணையத்திடம் அவா் மேல்முறையீடு செய்தாா். இந்த மனு மத்திய தகவல் ஆணையா் என். வனஜா சா்னா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
Advertisement
அப்போது, ‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ மேற்கொண்டு வரும் விசாரணையின் நிலை மற்றும் விசாரணை முடிவுகள் குறித்து மட்டுமே கேட்கப்பட்டது. இது எந்த விதத்திலும் சிபிஐ-யின் தொடா் விசாரணையை பாதிக்காது’ என்று மனு தாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட தகவல் ஆணையா் என்.வனஜா சா்னா, ‘சிபிஐ-யின் தலைமை பொது தகவல் அதிகாரி எந்தவொரு சரியான காரணத்தையும் தெரிவிக்காமல், ஆா்டிஐ சட்டத்தின் 8(1)(ஹெச்) பிரிவை மட்டும் காரணம் காட்டி தகவல் தர மறுத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, தகவல் தர மறுத்ததற்கான ஏற்புடைய காரணத்தை சிபிஐ தெரிவிக்க வேண்டும். மேலும், ஆா்டிஐ மூலம் கேட்கப்பட்ட வழக்கு விசாரணையின் நிலை, இப்போது வரை உள்ள விசாரணை முடிவு விவரங்களையும் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டாா்.