லக்னெள வருவோருக்கு கரோனா பரிசோதனை: மாவட்ட நிர்வாகம் தகவல்
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தீபாவளிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து லக்னெளவுக்கு வரும் மக்கள் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, லக்னெள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளியைக் கொண்டாடுவதற்காக மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வரும் நிலையில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதற்காக 13 சிறப்பு மருத்துவக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் தொடர்பு எண் உள்ளிட்டவிவரங்களும் குறிப்பிடப்படும் என்று லக்னெள தலைமை மருத்துவ அதிகாரி (சி.எம்.ஓ) டாக்டர் சஞ்சய் பட்னாகர் தெரிவித்தார்.
Advertisement
பண்டிகை காலங்களில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் இதுவரை 66,237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 917 பேர் உயிரிழந்துள்ளனர்.