ஆமதாபாத்தில் முழு ஊரடங்கு: ரோந்துப் பணியில் காவலர்கள்
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இன்று காலை 6 மணி முதல் வார இறுதி நாள்களுக்கான முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இன்று காலை 6 மணி முதல் வார இறுதி நாள்களுக்கான முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பொதுமக்கள் வெளியில் நடமாடுவதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றனர்.
எனினும் மாநிலம் முழுவதும் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படாது என்று முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்த நிலையில், சில நகரங்களில் மட்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி ஆமதாபாத், ராஜ்கோட், சூரத் மற்றும் வதோரா ஆகிய நகரங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் இன்று (சனிக்கிழமை) இரவு 9 மணி முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், ஆமதாபாத் நகரில் இன்று காலை 6 மணி முதலே வார இறுதி முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.
பொதுமக்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும், தேவையின்றி வெளியே வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நகரின் முக்கியப் பகுதிகளில் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.