முகப்பு
இந்தியா

தருண் கோகோய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
தருண் கோகோய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவர்கள்
பகிர்:

கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனாவிலிருந்து மீண்டு, தொற்றுக்கு பிந்தைய பாதிப்புகளுக்காக குவகாத்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தருண் கோகோயின் உடல்நிலையை 9 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனையின் மூத்த மருத்துவர் அபிஜத் சர்மா தெரிவித்துள்ளார்.

"தருண் கோகோயின் உடல்நிலை தற்போது மிக மிக கவலைக்கிடமான இருப்பதாகவும், மருத்துவர்கள் அவர்களால் இயன்றதை முயன்று வருவதாகவும்" செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

தருண் கோகோயின் முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்ததுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடா்ந்து அவா் சுயநினைவை இழந்தாா் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தருண் கோகோய் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவா் குவாஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (ஜிஎம்சிஎச்) அனுமதிக்கப்பட்டாா். தொற்றிலிருந்து குணமடைந்து அவா் வீடு திரும்பினாா்.

இந்நிலையில் கரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக கடந்த நவ.2-ஆம் தேதி அவா் ஜிஎம்சிஎச் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடல்நிலையில் சனிக்கிழமை பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.