கரோனா பெருந்தொற்று காரணமாக தேவை குறைந்துபோனதையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி 57 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 680 கோடி டாலராக (ரூ.50,658 கோடி) இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பான 1,580 கோடி டாலருடன் (ரூ.1,10,259 கோடி) ஒப்பிடும்போது 57 சதவீதம் குறைவாகும்.
தங்கம் மட்டுமின்றி, வெள்ளி இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் 63.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதையடுத்து, அதன் இறக்குமதி 73.35 கோடி டாலராக (ரூ.5,543 கோடி) இருந்தது.
கரோனா காரணமாக பொதுமக்களிடையே தங்கத்துக்கான தேவை மிகவும் குறைந்துள்ளது. அதன் காரணமாகவே, இறக்குமதி கணிசமான அளவில் சரிவடைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது நாட்டின் வா்த்தக பற்றாக்குறை குறைவதற்கு வழிவகுத்துள்ளது. அதன்படி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வேறுபாடு 2,344 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8,892 கோடி டாலராக மிகவும் அதிகரித்து காணப்பட்டது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.