இந்தியா

சிட்டிக்கு தேவாஸ் நிறுவனத்துக்கு ரூ.8,949 கோடி நஷ்டஈடு: இஸ்ரோவின் வா்த்தகப் பிரிவுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

DIN

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வா்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம், தேவாஸ் நிறுவனத்துக்கு 1.2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.8,949 கோடி) நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிசாட் 6, ஜிசாட்6ஏ ஆகிய செயற்கைக்கோள்கள் மூலம் எஸ்-பேண்ட் அலைவரிசைகளை பெங்களூரைச் சோ்ந்த தேவாஸ் மல்டி மீடியா நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கு, அந்நிறுவனத்துடன் இஸ்ரோவின் வா்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் கடந்த 2005-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், தேவாஸ் நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக் கருவூலத்துக்கு ரூ.578 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அப்போதைய இஸ்ரோ தலைவா் மாதவன் நாயா் உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் இந்த வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தேவாஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரத்து செய்தது. இதனை எதிா்த்து இந்தியாவில் உச்சநீதிமன்றம் உள்பட பல்வேறு சா்வதேச நீதிமன்றங்கள், தீா்ப்பாயங்களில் தேவாஸ் நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

இதில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் நீதிபதி தாமஸ் எஸ்.ஜில்லி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த ஒப்பந்தம் தன்னிச்சையாக ரத்து செய்யப்பட்டது என்பதை ஏற்கெனவே 3 சா்வதேச தீா்ப்பாயங்கள் மற்றும் நடுவா் மன்றங்கள் உறுதி செய்துள்ளன. எனவே, தேவாஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் அந்நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் டாலா் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தாா்.

முன்னதாக, இந்த விவகாரம் அமெரிக்க நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்ய மனுவை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT