மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை அருகே உள்ள பிவாண்டி பகுதியின் படேல் குடியிருப்பு பகுதியில் உள்ள 3 அடுக்குமாடிக் கட்டடம் ஒன்று இன்று அதிகாலை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 20 பேரை அப்பகுதி மக்கள் மீட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஒரு குழந்தை உட்பட 11 பேரை மீட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விபத்திற்குள்ளான கட்டடம் 40 ஆண்டுகள் பழமையானது என்றும் கட்டடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர தனது சுட்டுரையில், “மகாராஷ்டிர பிவண்டியில் கட்டடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட உயிரிழப்பை அறிந்து துயருற்றேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.