பயனாளர்களின் தகவல்களை உரிய அனுமதியுடனே பகிர்கிறோம்: கூகுள் பே விளக்கம்
கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் விவரங்களை, அந்நிறுவனம் மூன்றாம் நபர்களுக்கு பகிர்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு கூகுள் இன்று விளக்கம் அளித்துள்ளது.
புது தில்லி: கூகுள் பே செயலியைப் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களின் விவரங்களை, அந்நிறுவனம் மூன்றாம் நபர்களுக்கு பகிர்வதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு கூகுள் இன்று விளக்கம் அளித்துள்ளது.
கூகுள் பே நிறுவனம், மத்திய அரசின் வணிக சட்டங்களுக்கு உள்பட்டு செயல்படவில்லை, பணப்பரிமாற்றத்தில் ஈடுபட ரிவர்வ் வங்கியின் அனுமதி பெறவில்லை, தனது பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு பகிர்வதாகக் கூறி தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது.
இந்தப் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், பயனாளர்களின் தகவல்களை என்பிசிஐ மற்றும் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடும் (பிஎஸ்பி) வங்கிகளின் முன் அனுமதியுடனே, பயனாளர்களின் விவரங்கள் மூன்றாம் தரப்புக்கு பகிரப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
என்பிசிஐ வெளியிட்டிருக்கும் 'யுபிஐ'வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே கூகுள் பே பணப்பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. அதேவேளையில், சட்டத்தைப் பின்பற்றியே செயல்படுகிறது. பயனாளர்களின் பணப்பரிமாற்ற விவரங்களை மூன்றாம் தரப்புடன் பகிர்ந்து கொள்வதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.