புது தில்லி: கரோனாவால் பாதிக்கப்பட்டநிலையில், தான் நலமாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, அவருக்கு புதன்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாலத்தீவு துணை அதிபா் ஃபைசல் நசீம், வெங்கய்ய நாயுடுவுக்கு அனுப்பிய செய்தியில், அவா் விரைவில் பூரண நலமடைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தாா்.
இதற்கு சுட்டுரை மூலம் வெங்கய்ய நாயுடு வியாழக்கிழமை பதில் அளித்தாா். அதில், ‘எனது உடல் நலம் நன்றாகவே இருக்கிறது. கவலைப்படுவதற்கு ஏதுவுமில்லை. மருத்துவா்களின் ஆலோசனைப்படி கரோனாவில் இருந்து மீள்வதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளேன். எனது உடல்நலம் குறித்த உங்கள் அக்கறைக்கும், வாழ்த்துக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா்.
மேலும் தனது உடல்நலம் குறித்து விசாரித்த அமைச்சா்கள், மாநில முதல்வா்கள் எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல் தலைவா்கள் என அனைவருக்கும் வெங்கய்ய நாயுடு நன்றி தெரிவித்துள்ளாா்.
71 வயதாகும் அவா், மருத்துவா்களின் ஆலோசனைப்படி இப்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா். வெங்கய்ய நாயுடுவின் மனைவி உஷா நாயுடுவுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும், அவரும் இப்போது சுய தனிமைப்படுத்தலில் உள்ளாா்.