முகப்பு
இந்தியா

உம்பன் புயல் முழுமையாக கரையைக் கடக்க இரவு 7 மணியாகும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான உம்பன் புயலானது மேற்கு வங்க மாநிலம் சுந்தரவன காடுகள் பகுதிக்கு அருகே கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. இது இன்று மாலை கொல்கத்தாவை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 மே 2020, 6:04 pm IST
பகிர்:

புது தில்லி: வங்கக் கடலில் உருவான உம்பன் புயலானது மேற்கு வங்க மாநிலம் சுந்தரவன காடுகள் பகுதிக்கு அருகே கரையைக் கடந்து கொண்டிருக்கிறது. இது இன்று மாலை கொல்கத்தாவை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உம்பன் புயல் கரையைக் கடப்பதால் மேற்கு வங்க கடற்கரையோர மாவட்டங்களில் காற்றானது மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வீசுகிறது.

உம்பன் புயலானது இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கரையைத் தொட்டது. அதன் கண் போன்ற பகுதி எப்போது வேண்டுமானாலும் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலின் பரப்பு சுமார் 120 கி.மீ. என்றும், அதன் கண் போன்ற அமைப்பின் வட்டம் 40 கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த ஒட்டுமொத்த புயல் சின்னமும் கரையைக் கடந்து முடிக்க 3 - 4 மணி நேரங்கள் ஆகும். தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கனாக்கள், புயல் சின்னத்தின் கண் போன்ற அமைப்புக் கடந்து பேரமைதி ஏற்படும் பகுதியாக இருக்கும் என்றும், அது கடந்து முடிந்ததும் 30 நிமிடங்களில்  மிகக் கன மழையும், பலத்த காற்றும் வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த புயல் சின்னமும் கரையை கடந்து முடிக்க இன்று இரவு 7 மணியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், புயல் சின்னம் பற்றி கணிக்கப்பட்டது மிகத் துல்லியமாக இருப்பதாகவும், இந்தியா தரப்பில் வங்கதேசத்துக்கும் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.