பிரிட்டன் பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து
குடியரசு தினவிழாவில் பங்கேற்க இருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வருகையை ரத்து செய்துள்ளார்.
குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் பரவி வருவதையடுத்து அவர் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார். எனினும் அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியாவுக்கு வர அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 பேர் வரையில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு தற்காலிகமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இந்தியக் குடியரசுத் தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதினார். இந்த சூழ்நிலையில், தற்போது உருமாறிய கரோனா பரவல் சூழலால் இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமர் வருகை ரத்தாகியுள்ளது.