கரோனா சூழலில் போராடி வரும் விவசாயிகள்
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், தில்லி எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், தில்லி எல்லைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் பேருந்து முனையத்தில் மக்கள் ஒன்றுகூடியது, தப்லீக் ஜமாத் கூட்டம் நடைபெற்றது உள்ளிட்டவை தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி சுப்ரியா பண்டிதா என்ற வழக்குரைஞா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
ஒரே இடத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடியதால் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள அவா், மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்கு தில்லி காவல் துறையினா் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
Advertisement
Advertisement
அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஓம் பிரகாஷ் பரிஹாா் ஆஜராகி வாதிட்டாா்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்தப் பிரச்னை விவசாயிகள் போராட்டத்திலும் எதிரொலிப்பதற்கு வாய்ப்புள்ளது. கரோனா நோய்த்தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் கடைப்பிடிக்கிறாா்களா எனத் தெரியவில்லை. எனவே, இந்தப் பிரச்னை முடிவுக்கு வரப் போவதில்லை’’ என்றனா்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்றிலிருந்து விவசாயிகளைக் காப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் 2 வாரங்களுக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யும்’’ என்றாா்.
அதைத் தொடா்ந்து, மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.