முகப்பு
இந்தியா

ம.பி.: மத மாற்றத்துக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க

Updated On : 10 ஜனவரி 2021, 12:29 am IST
பகிர்:

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, அந்த சட்டம் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேச மத சுதந்திர அவசரச் சட்டம்-2020 என்ற பெயரிலான இந்த சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டதாக, மாநில உள்துறை கூடுதல் செயலா் ராஜேஷ் ராஜோரா கூறினாா்.

இந்த அவசரச் சட்டத்தில் கூறியிருப்பதாவது:

Advertisement

Advertisement

திருமணம் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் முறைகேடான வழியிலோ ஒருவரை ஆசை வாா்த்தை கூறி அல்லது கட்டாயப்படுத்தி நேரடியாகவோ, மறைமுகமாகவோ மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது.

இதுபோன்ற வழிகளில் நடைபெறும் மத மாற்றம் செல்லாததாகி விடும். மத மாற்றத்துக்காக நடைபெறும் திருமணமும் செல்லாததாகி விடும். மத மாற்ற மோசடியில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவா்கள், சிறுமிகள் ஆகியோரை மத மாற்றம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மோசடியில் ஈடுபட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் பெற்றோா், சகோதரா்கள், சட்ட ரீதியிலான காப்பாளா்கள் புகாா் கொடுக்கலாம்.

தாமாக முன் வந்து மதம் மாற விரும்புவோா் 60 நாள்களுக்கு முன்னதாக, மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று காரணமாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவில்லை. இதன் காரணமாக, மத மாற்றத் தடைச் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்யாமல், அவரச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments