பஞ்சாபில் 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து
கரோனா பரவல் காரணமாக பஞ்சாபில் 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவல் காரணமாக பஞ்சாபில் 5, 8, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புகளுக்குச் செல்வார்கள் என்றும் அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும், 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 5 பாடங்களில் 4 பாடங்களுக்கு ஏற்கெனவே தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளதால் அதன் அடிப்படையில் மதிப்பெண்களை மதிப்பிடலாம். அதேபோன்று 8 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் பஞ்சாப் கல்வி வாரியம் மதிப்பெண்களை நிர்ணயிக்கலாம் என்று கூறியுள்ளார்.
Advertisement
முன்னதாக மாநிலத்தில் கரோனா பாதிப்பு குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் மாணவர்களின் தேர்வு குறித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 10 ஆம் வகுப்புக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.