பற்றி எரியும் தகனமேடைகள்: 2020 மோசமில்லை என சொல்ல வைக்குமோ 2021?
கரோனா இரண்டாவது அலையின் கோரப்பிடியில் நாடு சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் கடந்து வந்த 2020-ஆம் ஆண்டே பரவாயில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது 2021.
கரோனா இரண்டாவது அலையின் கோரப்பிடியில் நாடு சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில், நாம் கடந்து வந்த 2020-ஆம் ஆண்டே பரவாயில்லை என்று சொல்ல வைத்திருக்கிறது 2021.
2020ஆம் ஆண்டு கரோனா என்ற ஒற்றைச் சொல் கற்றுக் கொடுத்த புதிய பாடங்கள் பல. கரோனா பேரிடர் பலரது உயிர்களை வாரிச் சுருட்ட, பொதுமுடக்கம் என்ற கட்டுப்பாட்டால், ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்து உயிர் மட்டும் இருக்கும் பிணங்களாகினர்.
ஆனால், 2021-ஆம் ஆண்டு கரோனா இரண்டாவது அலை, அப்பேர்பட்ட 2020-ஆம் ஆண்டையே பரவாயில்லை என்று சொல்ல வைத்து விடுமோ என்ற அச்சம் மேலிடுகிறது.
Advertisement
கடந்த ஆண்டு கரோனா பேரிடர் காலத்தை விடவும் இந்த ஆண்டில் ஒரு நாள் பாதிப்பு கடுமையாக உயர்ந்து, 2 லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. அதுபோலவே மரணங்களும்.
மகாராஷ்டிரம், பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா நோயாளிகளின் உடல்களால் தகன மேடைகளும், இடுகாடுகளும் நிரம்பி வழிகின்றன. இப்போதைக்கு இதுதான் அந்த மாநில சுகாதாரத் துறை எதிர்கொண்டிருக்கும் பெரும் சவாலாக உள்ளது.
சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லாமல் மருத்துவமனைகள் ஒரு பக்கம் நிரம்பி வழியும் நிலையில், மறுபக்கம் எரியூட்டவும் அடக்கம் செய்யவும் போதிய வசதி இல்லாமல் குப்பை அள்ளும் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு வருகிறது கரோனா நோயாளிகளின் உடல்கள்.
பிகாரில் மூடப்பட்டிருந்த மின்னணு தகனமேடைகள் அனைத்தும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. உத்தரப்பிரதேசத்திலோ, பற்றி எரிந்து கொண்டிருக்கும் தகனமேடைகளைப் பொதுமக்கள் பார்க்காத வண்ணம் தகடுகளைக் கொண்டு மறைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள் அதிகாரிகள்.
லக்னௌவில் உள்ள தகனமேடையில் ஏராளமான உடல்கள் ஒரே நேரத்தில் எரியூட்டப்படும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத்தொடர்ந்து, அந்த தகன மேடையை மறைக்கும் வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஒரு சில நாள்களுக்குள் ஏராளமான மின்னணு தகனமேடைகளை அமைக்க உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாட்னாவிலும் இதே நிலைதான். தினந்தோறும் தகனமேடைகளின் வாயில்களில் உடல்களுடன் நின்றிருக்கும் உறவினர்கள் மாறுகிறார்களே தவிர, அந்த நீண்ட வரிசை மாறவில்லை. ஒரு நாளைக்கு ஒரு உடலை எரிப்பதே பெரிய வேலை என்ற நிலையில், இப்படி நாள் ஒன்றுக்கு எண்ணிக்கையில் அடங்கா உடல்களை எரிக்கத் தேவையான ஊழியர்களும் இல்லை. இருக்கும் ஊழியர்களும் மணிக் கணக்கில் வேலை செய்துவிட்டு, உணவு சாப்பிடக் கூட நேரமில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு மின்னணு தகன மேடைக்கு 20 - 25 உடல்கள் எடுத்து வரப்படுவதாகவும், ஒரு உடலை எரிக்க 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் ஆவதாகவும், இப்படி இருந்தால் எங்களுக்கு ஓய்வு எடுக்கக் கூட நேரம் கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார் நிரு என்ற 35 வயது தொழிலாளி.
இதில், சுகாதாரத் துறை கொடுக்கும் புள்ளி விவரத்துக்கும், தகனமேடைகளில் எரிக்கப்படும் உடல்களின் எண்ணிக்கைக்கும் வேறுபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பி.என். பாண்டே, கரோனாவுக்கு தனது சகோதரரை பலி கொடுத்துவிட்டு, தகனக் கூடத்தில் காத்திருக்கிறார். அவர் கூறுகையில், எனக்கு 1984 போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் தான் நினைவுக்கு வருகிறது. அப்போது தான் 9-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். எங்குப் பார்த்தாலும் உடல்களாகக் காணப்பட்டது. இப்போதும் அதுபோலவே உள்ளது. எனது சகோதரரின் உடலை எரியூட்ட காலையில் வந்து வரிசையில் நின்று கொண்டிருக்கிறேன். இதுவைர 30 - 40 உடல்கள் எரிக்கப்பட்டுவிட்டன. இன்னமும் காத்துக் கொண்டே இருக்கிறேன் என்கிறார் அதிர்ச்சியிலிருந்து மீளாமல்.