மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார் என பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் குறித்து நேற்று இரவு முதல் தவறான செய்திகள் பரவி வருகின்றன.
இதையடுத்து சுமித்ரா மகாஜன் நலமாக உள்ளார் என்றும் அவரை பற்றிய செய்திகள் வெறும் வதந்தியே என்றும் பாஜக மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், சுமித்ரா மகாஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைவதாக பதிவிட்டு இருந்தார். இதற்கு விஜய்வர்கியா பதில் அளித்ததை அடுத்து சசிதரூர் அந்த பதிவை நீக்கியுள்ளார்.
மேலும் சசிதரூர், 'விஜய்வர்கியாவுக்கு நன்றி. எனது ட்வீட்டை நீக்கிவிட்டேன். இதுபோன்ற தவறான செய்திகளைக் கண்டுபிடித்து பரப்புவதற்கு மக்களைத் தூண்டுவது எது என்று தெரியவில்லை. சுமித்ரா ஜி நல்ல உடல்நலத்துடன் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.