ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்த சிங்கில் டோஸ் தடுப்பூக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனா வேகமாக பரவிவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணி உலகம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி தடுப்பூசி தயாரிப்பதை மேலும் தீவிரப்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒரு தவணை தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுவரை, ஐந்து தடுப்பூசிகள் ஒப்புதல் பெற்றுள்ளது. கரோனாவுக்கு எதிரான போரில் இது நாட்டை மேலும் வலுப்படுத்தும்" என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்திய நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "ஒரு தவணை தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் பிரைவேட் லிமிடட் இந்திய அரசிடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி விண்ணப்பித்தது.
இந்திய மக்களுக்கும் உலகத்திற்கும் ஒரு தவணை தடுப்பூசியை வழங்குவதில் முக்கிய மைல்கல்லாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது. பயோலாஜிக்கல் இ லிமிடட் நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை உலகம் முழுவதும் விற்பனை செய்ய எங்களின் விநியோக சங்கலியில் பயோலாஜிக்கல் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது. பல அரசுகள், சுகாதார நிறுவனங்கள், கவி, கோவேக்ஸ் போன்ற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட பயோலாஜிக்கல் நிறுவனம் புரிந்துவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது